தந்திர பூமியில்
சுதந்திரத்தை எங்கு தேட ?
மாந்திரீக மானுடத்தில்
மனித நேயத்தை எங்கு தேட?
அவசர அரசாங்கம் ..
மிக அவசர அரசாணை ..
அனிதாக்கள் ஆற்றாமையில்
சித்ராக்கள் சந்தேகத்தில்..
சிந்துக்களோ சில துணுக்கு
வரா கணக்கு பற்பல!
இதில் எங்கே தேட
என் குல மாந்தரின்
சுதந்திரத்தை !
ஊர் எல்லை தாண்டாத
ஏனைய கிராமத்து பெண்கள்..
உலகம் சுற்றும்
அறிவார்ந்த மங்கையர்கள் ..
இன்டர்நெட் அலசும்
இன்னொரு கூட்டம் ..
மாத விடாயில்
மங்கை இன்னும் திண்ணையில் ..
பள்ளிப் பாதியில்
முறை மாமானுடன் திருமணம் ...
முப்பது நாளில்
மூன்றாவது ஜீவன் எங்கே??
இன்னும் நிஜம் இது..
என் வட்டத்தில்!
கடல் தாண்டியும் கைதியாய்
வெளிநாடு வாழ்
மனைவிகள்!
விண் தாண்டியும்
விவாத பொருளாய்
விண்வெளி வீர மங்கை!
பதக்கம் வென்றும்
சமூக விதி விலக்காய்
விளையாட்டு வீராங்கனை!
இப்படியாய்
ரகங்கள் பலநூறு ..
ராகங்கள் பதினாறு..
துருவங்கள் இரண்டல்ல
சுதந்திரத்தின் இடைவெளியோ ஏராளம் !
எப்படி ஒப்பிட
எது சுதந்திர இந்தியாவென?
இரவில் பெண் தனியாக
நடக்கட்டும் - காந்தி
நிமிர்ந்த நன்னடை..
திமிர்ந்த ஞானச் செருக்கு - பாரதி
இப்படியாய்
அடுக்கலாம் ஆயிரங்கள் ..
புதுமைப்பெண் யாரென்று..
சுதந்திரம் எதுவென்று..
ஆனால் அதை
அடைந்தவரோ
பல ஆயிரத்தில் ஒருவரே!!
பெண் சுதந்திரமோ - இன்றளவில்
காத்திருந்தும் மண்ணை
பிளக்கும் முதல் இலை கூட அல்ல !
மாற்றாக மனதடியில் மறைந்தே
வளரும் வேர் !
பெண்ணே..
உன் வளர்ச்சி
வேங்கையாய் சீறட்டும்..
சுனாமியாய் சுழலட்டும்..
பட்டி தொட்டி எல்லாம்
சுதந்திர வேட்கைத்தீ
திசை மறந்து பரவட்டும் ...
பெண்ணே..
எதுவும் உன்னால் சாத்தியம்
ஆதலால் ஆசை கொள்..
ஆசையே அறிதல் தரும் !
அறிதலே புரிதல் தரும் !
புரிதலே தேவை தரும்!
தேவையே தேடல் தரும்!
உன் தேடல் நாளைய
சுதந்திரத்தின்
விடியல் ஆகட்டும்!
நம் பெண்கள்..
இருபதில்..
இருமடங்கு பண்படட்டும்..
முப்பதில்
விரும்பிய துறையனைத்திலும்
முன்னேறட்டும் ..
நாற்பதில்
நாடாளட்டும்..
ஐம்பதில்
அனுபவம் பகிரட்டும்
அடுத்த தலைமுறைக்கு!
செல்வங்கள் சேர்க்கட்டும்
சொந்தங்கள் மறவாமல் ..
நடுநிலை அடை மழையில்
நம் சமூகம் சங்கமிக்கட்டும்...
ஆணும் பெண்ணும்
அடுத்தவர் வெற்றிகளை
அடிக்கடி கொண்டாடட்டும் !
அன்று நின்று சொல்வேன்
பெண் சுதந்திரம் எது என்று!
அகம்பாவம் வேண்டாம்
பரிதாபம் வேண்டாம்
அடங்கவும் வேண்டாம்
அடக்கவும் வேண்டாம்
ஆடவும் வேண்டாம்
ஆணவமும் வேண்டாம்
அன்பால் அகம் அளப்போம் ...
அனைவரும் சுதந்திரம் சுவாசிப்போம்!!
மிக அருமை 👍
ReplyDeleteயாதார்த்த வரிகள்.உன் கவிதைகள் தொடர வாழ்த்துகள்
ReplyDeleteமிக அருமையான பதிவு. தொடர வாழ்த்துக்கள் அண்ணா.
ReplyDelete